திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
ஐந்தாம் திருமுறை
5.71 திருவிசயமங்கை - திருக்குறுந்தொகை
குசையும் அங்கையிற் கோசமுங் கொண்டவவ்
வசையின் மங்கல வாசகர் வாழ்த்தவே
இசைய மங்கையுந் தானுமொன் றாயினான்
விசைய மங்கையுள் வேதியன் காண்மினே.
1
ஆதி நாதன் அடல்விடை மேலமர்
பூத நாதன் புலியத ளாடையன்
வேத நாதன் விசயமங் கையுளான்
பாத மோதவல் லார்க்கில்லை பாவமே.
2
கொள்ளி டக்கரைக் கோவந்த புத்தூரில்
வெள்வி டைக்கருள் செய்விச யமங்கை
உள்ளி டத்துறை கின்ற உருத்திரன்
கிள்ளி டத்தலை யற்ற தயனுக்கே.
3
திசையு மெங்குங் குலுங்கத் திரிபுரம்
அசைய வங்கெய்திட் டாரழ லூட்டினான்
விசைய மங்கை விருத்தன் புறத்தடி
விசையின் மங்கி விழுந்தனன் காலனே.
4
பொள்ள லாக்கை அகத்திலைம் பூதங்கள்
கள்ள மாக்கிக் கலக்கிய காரிருள்
விள்ள லாக்கி விசயமங் கைப்பிரான்
உள்ள நோக்கியெ னுள்ளுள் உறையுமே.
5
கொல்லை யேற்றுக் கொடியொடு பொன்மலை
வில்லை யேற்றுடை யான்விச யமங்கைச்
செல்வ போற்றியென் பாருக்குத் தென்றிசை
எல்லை யேற்றலும் இன்சொலு மாகுமே.
6
கண்பல் உக்கக் கபாலம்அங் கைக்கொண்டு
உண்ப லிக்குழல் உத்தம னுள்ளொளி
வெண்பி றைக்கண்ணி யான்விச யமங்கை
நண்ப னைத்தொழப் பெற்றது நன்மையே.
7
பாண்டு வின்மகன் பார்த்தன் பணிசெய்து
வேண்டு நல்வரங் கொள்விச யமங்கை
ஆண்ட வன்னடி யேநினைந் தாசையாற்
காண்ட லேகருத் தாகி யிருப்பனே.
8
வந்து கேண்மின் மயல்தீர் மனிதர்காள்
வெந்த நீற்றன் விசயமங் கைப்பிரான்
சிந்தை யால்நினை வார்களைச் சிக்கெனப்
பந்து வாக்கி உயக்கொளுங் காண்மினே.
9
இலங்கை வேந்தன் இருபது தோளிற
விலங்கல் சேர்விர லான்விச யமங்கை
வலஞ்செய் வார்களும் வாழ்த்திசைப் பார்களும்
நலஞ்செய் வாரவர் நன்னெறி நாடியே.
10
திருச்சிற்றம்பலம்

மேலே செல்க

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com